ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும், போர்க்குற்றச்சாட்டின்பேரில்இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:-
அழிவின் பிடியிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காக்கவும், கொடூரக் கொலைகளைப் புரிந்த மஹிந்தரின் கூட்டத்தை அனைத்துலக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இடையறாத போராட்டங்கள், கிளர்ச்சிகள், அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்துகின்ற வகையில் ஈழத்தின் வீரப்பிள்ளை சிவந்தன் பாரிஸ் பட்டணத்தில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கி உள்ளார்.
பகலில் நெருப்பெனக் கொதிக்கும் வெயிலிலும், இரவில் ஊசிமுனையாகத் தைக்கும் கொட்டும் பனியிலும் உடலை வருத்திக்கொண்டு நடக்கிறார். சிவந்தனின் பயணம் வெற்றிகரமாக இடம்பெறவும், பயணத்தின் குறிக்கோள் ஈடேறவும், அவரது உடல்நிலை பாதிக்காத வகையில் இயற்கைத் தாய் துணை புரிய வேண்டும். தியாகப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”















